துார்வாரி சுத்தப்படுத்தும் வடிகால்கள்  குப்பையை உடனே அகற்றலாமே

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரின், பல பகுதிகள் மனை அங்கீகாரம் பெற்று வீடுகள் கட்டப்பட்டாலும், அடிப்படை கட்டமைப்பான மழைநீர் வடிகால் வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பாதாள சாக்கடை இணைப்பும் முழுமை பெறாததால், தெருவோரங்களில் உள்ள கால்வாய்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், வீதிகள் மட்டுமின்றி, வடிகாலிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் சுகாதார பாதிப்பை தடுக்க, நகராட்சி வாயிலாக உடனுக்குடன் வடிகாலில் துார்வாரி சுத்தப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

மழைநீர் தடையின்றி செல்ல தேவையான இடங்களில் அகலப்படுத்தப்பட்டும் வருகிறது. இருப்பினும், துார்வாரி சுத்தப்படுத்தும் கழிவுகளை, உடனுக்குடன் அகற்ற வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.

மக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகரில், கனமழை நீடித்தால், ஆங்காங்கே கால்வாயில் தேக்கமடைந்து காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், வெள்ளத்துடன் அடித்து சென்று ரோட்டில் பரவி விடுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதேபோல, பெரும்பாலானவர்கள் வடிகாலில் குப்பை கொட்டுகின்றனர். துார்வாரி சுத்தம் செய்தாலும், அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கழிவு மண் சரிந்து, மீண்டும் வடிகாலிலேயே விழுந்து விடும். இவ்வாறு, கூறினர்.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வடிகாலில் இருக்கும் கழிவு, துார்வாரி அகற்றப்பட்டு ரோட்டோரத்தில் குவிக்கப்படும். ஈரத்தன்மையுடன் கழிவை அகற்றுவதில் இடர்பாடு ஏற்படும். அதனால், ஓரிரு நாட்கள் கழித்து கழிவு அகற்றப்படுகிறது,' என்றனர்.

Advertisement