குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு ஆரஞ்ச் அலர்ட்!

2


சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மார்ச் 11) ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது; கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மார்ச் 11) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.


அதேபோல், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஒரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


திருநெல்வேலியில் ஜங்ஷன், டவுன், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், மகாராஜா நகர், கே.டி.சி.நகர் ஆகிய இடங்களில் காலை கன மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கங்கைகொண்டான், சேரன்மகாதேவி, மூன்றடைப்பு ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்தது.



மழை பாதிப்பை சரி செய்ய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சுகுமார், தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மிக கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் தொலைபேசி எண்:0462-2501070 அறிவிக்கப்பட்டு உள்ளது.


தூத்துக்குடி மாநகரப் பகுதிகள், விளாத்திகுளம், முத்தையாபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று (மார்ச் 11)காலை முதல் நல்ல மழை பெய்தது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் சுமார் 1,000 நாட்டுப் படகு மற்றும் 500 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்க கலெக்டர் இளம் பகவத் அறிவுறுத்தி உள்ளார். அவர் அவசர உதவிக்கு 94864 54714, 93840 56221 ஆகிய எண்களை மக்கள் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement