அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்: பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுப்பு

10


டெஹ்ரான்: '' அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது. அந்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்,'' என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் கூறியுள்ளார்.


ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. பிறகு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதன் பிறகு அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் தொடர்ந்து அணுசக்தி தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், ' ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஈரானை கையாள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ராணுவ ரீதியில் கையாள வேண்டும். மற்றொன்று இரு நாட்டு ஒப்பந்தம் போட வேண்டும். நான் ஒரு ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன். அந்நாட்டிற்கு தீங்கு செய்ய விரும்பவில்லை' எனக்கூறியிருந்தார்.


இது தொடர்பாக ஈரான் தலைவரான அயதுல்லா அலி கமேனி கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ஈரானை மிரட்ட முடியாது. அவர்களின் பேச்சுவார்த்தை பிரச்னைகளை தீர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அவை ஆதிக்கம் செலுத்துவதையே நோக்கமாக கொண்டுள்ளன என தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் கூறுகையில், அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டல் விடுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement