ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி

10

சண்டிகர்: ஹரியானாவில் 10 மாநகராட்சிகளில் நடந்த மேயருக்கான தேர்தலில் பா.ஜ., 9ல் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் ஒரு மேயர் இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.



ஹரியானாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பரிதாபாத், ஹிசார், ரோஹ்தக், கர்னல், யமுனா நகர், குருகிராம், மனேசர் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் 21 நகராட்சிகளுக்கும் கடந்த மார்ச் 2ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதோடு, அம்பாலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. மேலும், கடந்த 9ம் தேதி பானிபட் மாநகராட்சிக்கு தனியாக தேர்தல் நடந்தது.


மொத்தம் 10 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலில், பரிதாபாத், அம்பாலா, யமுனா நகர், ஹிசார், கர்னல், ரோஹ்தக், சோனிபட் உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. மனேசரில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.


குருகிராமில் நடந்த மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரிவரல் சீமா பகுஜாவை, 1,79,485 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளர் ராஜ் ராணி தோற்கடித்தார். அதேபோல, மனேசர் மேயருக்கான தேர்தலில் பா.ஜ.,வின் சுந்தர் லாலை, 2,235 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் சுயேட்சை வேட்பாளர் இந்திரஜித் யாதவ்.


இதன்மூலம், 10 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மாநகராட்சி மட்டும் பா.ஜ., வசம் இல்லாமல் போனது. அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி ஏற்பட்டிருப்பது அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவாகும்.

Advertisement