கோவை மக்களை வஞ்சிக்கும் தி.மு.க., அரசு! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

1

பொள்ளாச்சி; ''கோவை மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க., அரசு, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்காமல், அமைச்சரை மகிழ்விக்க பழநியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் உருவாக்க முயற்சிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பழநியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கி, உடுமலை, மடத்துக்குளம் பகுதியை இணைப்பதாக தகவல் பரவி வருகிறது.இதற்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தார்.

இது குறித்து, எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:

ஆங்கிலேயர் காலத்தி லேயே வருவாய் கோட்டமாக இருந்த பொள்ளாச்சிஇன்னும் மாவட்டமாக மாறவில்லை.

புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என, கடந்த, 25 ஆண்டுகளாக சட்டசபையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளேன்.

அ.தி.மு.க., ஆட்சியில், இதற்கான கருத்துரு தயார் செய்த போது, கொரோனா பரவல், தேர்தல் போன்ற காரணங்களால், அறிவிப்பு வெளியிடாமல் போனது. தி.மு.க., அரசிடமும் தொடர்ந்து மாவட்ட அறிவிப்பு குறித்து வலியுறுத்தியும் பயன் இல்லை.

தேர்தலில் அ.தி.மு.க.,வை வெற்றிபெற வைத்த கோவை மாவட்ட மக்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாறு தண்ணீர் கொண்டு செல்ல அமைச்சர் சக்கரபாணி முயற்சித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது, இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் அமைச்சருக்காக, பழநியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் அறிவிப்பதாக தகவல் பரவுகிறது.

அவ்வாறு மாவட்டம் அறிவித்தால், ஒட்டன்சத்திரத்துக்கு பி.ஏ.பி., தண்ணீர் கொண்டு செல்லப்படும். மாவட்ட அறிவிப்புக்கான சதி திட்டம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே, பி.ஏ.பி., திட்டத்தில் விவசாயிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

பழநியை மாவட்டமாக்கி இப்பகுதிகளை இணைக்கும் போது, திருமூர்த்தி, அமராவதி அணைகள், வெறும் குடிநீர் திட்டத்துக்கு செயல்படுத்தக்கூடியதாக மாறிவிடும். விவசாயம் முற்றிலும் பாதிக்கும்.

எனவே, மடத்துக்குளம், உடுமலை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய தாலுகாக்களை இணைத்து, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இல்லையெனில் பெரும் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement