வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்

16

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விவசாயத் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தம்பதியர் பழனிசாமி, 84, அவரின் மனைவி பர்வதம், 70, வசித்து வந்தனர். பிள்ளைகள் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்த நிலையில், இந்த தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்தனர்.


இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த பக்கத்து தோட்டத்துக்காரர் சென்று பார்த்த போது, தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பல்லடம் அருகே சில மாதங்களுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த வயது முதிர்ந்த கணவன் மனைவி, அவர்களது மகன் ஆகிய மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கொலையாளிகள் யார் என்பதை இன்னும் கண்டறிய முடியவில்லை.


இத்தகைய சூழ்நிலையில் தற்போது அவிநாசி அருகே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

Advertisement