அவிநாசியில் விவசாய தம்பதி கொலை; அண்ணாமலை கண்டனம்

சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023ம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.



தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச்,


சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.


ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. தி.மு.க., அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள போலீசார் மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள்.


சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றினால் தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement