மாமனார், மாமியாரை தாக்கிய பெண் டாக்டர் வீடியோ வைரல்

பெங்களூரு: பெங்களூரின் அன்னபூர்னேஸ்வரி நகரில் வசிப்பவர் நரசிம்மையா, 65. இவரது மகனுக்கும், அரசின் விக்டோரியா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் பிரியதர்ஷினி, 38, என்பவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரியதர்ஷினிக்கும், அவரது கணவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குழந்தைகளுடன் பிரியதர்ஷினி தனியாக வசிக்கிறார்.

கணவர், மாமனார், மாமியாரை மனரீதியில் பிரிய தர்ஷினி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நரசிம்மையா புற்றுநோயால் அவதிப்படுகிறார். இவரது மனைவி, வயது முதிர்வு காரணமாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 10ம் தேதி இரவு 8:15 மணியளவில் திடீரென, கணவர் வீட்டுக்கு வந்த பிரியதர்ஷினி, மாமனாரையும், மாமியாரையும் மனம் போனபடி தாக்கியுள்ளார்.

மாமியாரின் தாலியை பிடித்து இழுத்து தாக்கினார். காலால் உதைத்தார்.

அக்கம், பக்கத்தினர் தடுக்க முயற்சித்தும் பலன் இல்லை. இதை சிலர், மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த வீடியோ நேற்று வைரல் ஆனது.

வீட்டுக்குள் நுழைந்து, தன்னையும், மனைவியையும் தாக்கிய மருமகள் மீது, அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் நரசிம்மையா புகார் அளித்துள்ளார்.

Advertisement