41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க விரைவில் தடை; 'செக்' வைக்கும் டிரம்ப்

6

வாஷிங்டன்: சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க அதிபர் டிரம்ப் விரைவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளார்.



அமெரிக்காவின் அதிபர் ஆன நாளில் இருந்து டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் ஏறுமுகமாகவே உள்ளது. அவரின் செயல்களில் அதிக கவனம் ஈர்த்த ஒன்று சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என அந்நாட்டினர் கூறி வருகின்றனர்.


இந்த நடவடிக்கையின் முக்கிய கட்டமாக 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக பயணிக்க தடை விதிக்கப்படலாம். அதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கி இருக்கின்றன.


இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், நியூயார்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு;


அமெரிக்காவின் நிர்வாக தரப்பில் கிடைத்த வரைவு அறிக்கையின் அடிப்படையில், மொத்தம் 41 நாடுகள் 3 குழுக்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன. முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, சோமாலியா, வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட நாடுகளின் குடிமக்கள், முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது முழுமையாக விசா இடை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.


2வது குழுவில் 5 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எரித்திரியா, ஹைதி, லாவோஸ், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகள் இதில் இருக்கின்றன. இந்த 2வது குழுவில் இடம்பெற்றிருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசாவில் பகுதியாக கட்டுப்பாடுகள் அல்லது பகுதி அளவிலான இடைநீக்கம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா, மாணவர்களுக்கான விசாக்கள், புலம்பெயர்வு விசா போன்றவற்றை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதக்கப்படும்.


3வது குழுவில், பாகிஸ்தான், பூடான், மியான்மர் உள்ளிட்ட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்கு விசா விவகாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ள குறைபாடுகள் சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.


அதிபராக டிரம்ப் முதல் முறையாக பதவியேற்ற போது, 7 இஸ்லாமிய நாட்டினர் அமெரிக்கா பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இம்முறை 41 நாடுகள் என பட்டியல் நீண்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement