தீர்த்தவாரியுடன் தெப்ப உற்ஸவம் நிறைவு

திருப்புத்துார்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

இக்கோயிலில் மாசி தெப்ப உத்ஸவம் மார்ச் 5ல் துவங்கியது. முதல் நாள் முதல் பெண்கள் தெப்பக்குளக்கரையில் விளக்கேற்றி வழிபட்டனர். ஒன்பதாம் நாளில் வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் பத்தாம் நாளை முன்னிட்டு பகலில் ஒரு முறையும், இரவில் இரு முறையும் உபயநாச்சியாருடன் பெருமாள் தெப்பம் வலம் வந்தார்.

நேற்று காலை 8:50 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியர் மற்றும் சக்கரத்தாழ்வாருடன் புறப்பாடாகி தெப்பமண்டபம் எழுந்தருளினார். பக்தர்கள்பெருமாளை தரிசித்தனர். காலை 11:30 மணி அளவில் சக்கரத்தாழ்வார் தெப்ப மண்டபம் எதிரே படித்துறையில் எழுந்தருளி பூஜைகள் நடந்தன.

பின்னர் பட்டாச்சார்யார்களால் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சக்கரத்தாழ்வார் தெப்ப மண்டபம் எழந்தருளி பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. இரவு பெருமாள், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா வந்து ஆஸ்தானம் சேர்ந்து உத்ஸவம் நிறைவடைந்தது.

Advertisement