குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு

பாலக்காடு, :குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, அச்சுதன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேல்சாந்தி என்றழைக்கப்படும் தலைமை அர்ச்சகர் தேர்வு நடக்கிறது. ஏப்ரல் முதல் ஆறு மாதத்துக்கான மேல்சாந்தி தேர்வு நேற்று கோவில் நமஸ்காரம் மண்டபத்தில் நடந்தது.
தேவஸ்தான நிர்வாக குழு தலைமையில் நடந்த நேர்முகத் தேர்வில், தகுதி பெற்ற, 38 விண்ணப்பதாரர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது.
இதில், அச்சுதன் நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில் தந்திரி தினேசன் நம்பூதிரிப்பாடு, தற்போதைய மேல்சாந்தி ஸ்ரீஜித் நம்பூதிரி, தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, மனோஜ், விஸ்வநாதன், நிர்வாகி வினயன் ஆகியோர் முன்னிலையில், மேல்சாந்தி தேர்வு நடந்தது.
கேரளா மலப்புரம் மாவட்டம், முதூர் கவபிரா மாறத்து மனையை சேர்ந்த அச்சுதன் நம்பூதிரி, வளாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சம்ஸ்கிருதம் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.