* 'தினமலர்' செய்தி எதிரொலி காஞ்சி பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி தீவிரம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சேக்குபேட்டையில் உள்ள டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு செப்., மாதம் மழை பெய்தபோது, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியதால் கொசுத்தொல்லை அதிகரித்தது.

மாணவர்களும் விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர், பள்ளி மைதானத்தை ஆய்வு செய்தனர். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறும் வகையில் மைதானம் முழுதும் மண் கொட்டப்பட்டு, மழைநீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைத்து, மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., எழிலரசன் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாநகராட்சி சார்பில், லாரி வாயிலாக மண் கொண்டு வரப்பட்டு மழைநீர் தேங்கிய பகுதியில் குவியல் குவியலாக கொட்டப்பட்டது. ஆனால், மண் குவியலை பரப்பி, மைதானத்தை சமன் செய்யாமல் சீரமைப்பு பணி கிடப்பில் போட்பப்டடது.

இதனால், விளையாட்டு மைதானத்தில், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள, பல மாநகராட்சி பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாத சூழ்நிலையில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு விசாலமான விளையாட்டு மைதானம் இருந்தும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், மைதானத்தில் மாணவர்கள் விளையாட முடியாத பரிதாப நிலை உள்ளது.

எனவே, மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் குவியல், பொக்லைன் இயந்திரம் வாயிலாக பரப்பி விடப்பட்டு, மைதானத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement