நவீன முறையில் பருத்தி சாகுபடி19ல் கண்காட்சி, கருத்தரங்கு



நவீன முறையில் பருத்தி சாகுபடி19ல் கண்காட்சி, கருத்தரங்கு


நாமக்கல்:பருத்தி சாகுபடியில், அடர் நெருக்கு நடவுமுறை குறித்து, வரும், 19ல், கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
அடர் நெருக்கு நடவுமுறை பருத்தி உற்பத்தி திட்டத்தின் கீழ், உழவர் விழா மற்றும் கண்காட்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும், 19 காலை, 10:00 மணிக்கு
நடக்கிறது. விழாவில், பருத்தி பயிர் சார்ந்த விதை நிறுவனங்கள், உர நிறுவனங்கள், சொட்டு நீர் நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள், சைமா பருத்தி அபிவிருத்தி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலை பருத்தி ஆராய்ச்சி நிலையம், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேளாண் துறை ஆகிய பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள் தங்களது இடுபொருட்கள், உபகரணங்கள், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி, செயல்விளக்கம் அளிக்க உள்ளன.
மேலும், பருத்தி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உரையாற்றி, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
அறுவடைக்கு பின் பருத்தி செடியை துாளாக்கும் இயந்திரம் பற்றியும் செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement