தண்டவாளத்தில் வீசப்பட்டது சூளகிரி தொழிலாளி உடல்

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னார் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி லோகநாதன், 24; பிப்., 19ம் தேதி மதியம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் மணிமேகலை புகார்படி, சூளகிரி போலீசார் தேடினர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், ரயில்வே தண்டவாளத்தில், வாலிபர் ஒருவரின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

வாலிபரை கத்தியால் குத்திக்கொன்று, தண்டவாளத்தில் வீசி சென்றது தெரிந்தது.

விசாரணையில், அது லோகநாதன் என தெரிந்தது. சூளகிரி ஸ்டேஷனுக்கு கர்நாடகா ரயில்வே போலீசார் வந்து விசாரித்தனர். இதில், பிப்., 19ல் ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு லோகநாதன் பஸ் ஏறிச் சென்றது தெரிந்தது.

கர்நாடகாவில் அவரை, மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சூளகிரி மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே போலீசார் தனித்தனியாக விசாரிக்கின்றனர்.

Advertisement