க.புதுப்பட்டி பேரூராட்சியில் மூன்று மாதமாக குடிநீர் சப்ளையில் குளறுபடி; வெப்பம் தகிக்கும் நிலையில் மக்கள் தவிப்பு

கம்பம்; -க. புதுப்பட்டி பேரூராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் சப்ளையில் நிலவும் குளறுபடியால் தொடர்ந்து 15 நாட்கள் குடிநீரை நிறுத்துவதும், இரு நாட்கள் வினியோகம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

க.புதுப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். விரிவாக்க பகுதிகளாக இந்திரா நகர் காலனி, கோசேந்திர ஓடை பகுதிகள் உள்ளன. பேரூராட்சியில் குடிநீர் வினியோகத்தில் தொடர்ந்து பிரச்னை நிலவுகிறது. தற்போது அம்ரூத் திட்டப் பணி செய்தும், ஆற்றில் பம்பிங் செய்யும் தண்ணீரை கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. 15 நாட்கள் குடிநீர் வினியோகம் இல்லாத நிலையில் பின் இரு நாட்கள் வினியோகிக்கும் நிலை உள்ளது. தற்போது தொடர்ந்து 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. கோடை வெப்பம் தகிக்கும் நிலையில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

செயல் அலுவலர் கூறுகையில், குடிநீர் வடிகால் வாரியம் 55 குதிரை திறன் கொண்ட 4 பம்பிங் மோட்டார்களை புதிதாக பொருத்தி வருகிறது. பராமரிப்பு பணிகள், மெயின் பகிர்மான குழாயில் உள்ள பழுதுகளை சரி செய்து வருகின்றனர். கடந்த மாதம் 15 நாட்கள் மட்டும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இன்னமும் ஒரு வாரத்திற்குள் பணிகள் முடிந்து சப்ளை சீராகும். அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகளை வாரியம் செய்து வருகிறது. அம்ரூத் திட்டம் ரூ.14.86 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் நெல் அறுவடை முடிந்ததும் அந்த பணிகளும் விரைவு படுத்தப்படும், என்றார்.

பொதுமக்கள் கூறுகையில்,' எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல், குடிநீர் சப்ளையை 3 மாதங்களாக நிறுத்தி நிர்வாகம் அவஸ்தை பட வைத்து வருவதாக பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement