உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கும் எனில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்மையில் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதில், ரூ.1000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாக செயல்பட்டு மேல் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது போன்று ஏதும் நடைபெற்றதாக தெரியவில்லை.
மாறாக, அமலாக்கத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பா.ஜ., ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வினர் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர், முற்றுகை போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழகத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.-தி.மு.க., நடத்தும் நாடக போக்கினை பார்த்தால் என்ன தெரிகிறது? மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக் கொண்டு புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது.
இது இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பான உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.




