ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; ராகுல் திட்டவட்டம்

44


புதுடில்லி: 'இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; நடத்திக் காட்டுவோம்' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ராகுல் கூறியியிருப்பதாவது: தெலுங்கானாவில் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஓ.பி.சி., இட ஒதுக்கீடு அதிகரிப்பு வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஓ.பி.சி., சமூகத்தினரின் எண்ணிக்கை ஏற்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சம பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் 42% இட ஒதுக்கீட்டுக்கான மசோதா தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளுடன் ஒவ்வொரு சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்திற்கான நியாயமான உரிமை ஜாதிவாரி கணக்கெடுப்பு.



ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா காட்டிய வழி ஒட்டுமொத்த நாட்டிற்கு தேவையானது. இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும். நடத்திக் காட்டுவோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement