ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

3

சென்னை: வாலிபர்கள் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.



ஆன்லைன் விளையாட்டில் ஏற்பட்ட பணம் நஷ்டம் எதிரொலியாக 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளை வகுத்து பிப்.14ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந் நிலையில், வாலிபர்கள் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


இந்த விதிகளை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கலானது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது, தடை செய்ய அல்ல என்று கூறப்பட்டது.


மேலும், உளவியல் ரீதியாகவும், அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு கூறியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

Advertisement