சூழல் பூங்காவாக மாறும் ஊட்டி ரேஸ் கோர்ஸ்

ஊட்டி : ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்ற பட்ஜெட்டில், 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானம், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகம் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் வரி; குத்தகை பாக்கி வைத்தது.

இதை தொடர்ந்து, நடந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி,நிலத்தை மீண்டும்வருவாய் துறையினர் சில மாதங்களுக்கு முன் கையகப்படுத்தினர்.

தொடர்ந்து, 54 ஏக்கரில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்றும், மாநில அரசின் உத்தரவுப்படி, தோட்டக்கலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.

ரூ.70 கோடி ஒதுக்கீடு



இந்நிலையில், தமிழகபட்ஜெட்டில், ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்றம் செய்ய, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி நகரில் மேலும் ஒரு பூங்கா, சுற்றுலா பயணியருக்கு தயாராகி வருகிறது. அதுவும் இயற்கை அழகை பேணி காக்கும் வகையில், சூழல் பூங்காவாக உருவாகும் நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''சூழல் பூங்கா அறிவிப்புக்கு பின், தோட்டக்கலை துறை வாயிலாக ரேஸ்கோர்ஸ் மைதானம் பராமரிக்கப் படுகிறது. மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் வந்த பின் அதற்கான பணிகள் உடனே துவக்கப்படும்,'' என்றார்.

Advertisement