ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை

பானிபட்: ஹரியானாவில் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


ஜனநாயக் ஜனதா கட்சி தலைவராக இருப்பவர் ரவிந்தர் மின்னா. பானிபட் பகுதியில் தமது உறவினர் மற்றும் நண்பர் ஒருவருடன் இருந்துள்ளார்.


அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் திடீரென சுட்டனர். இதில், ரவிந்தர் மின்னா சம்பவ இடத்திலேயே குண்டுபாய்ந்து பலியானார்.


ரவிந்தர் மின்னாவுடன் இருந்த இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அதிக நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த கொலை சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.


தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பானிபட் போலீசார், துப்பாக்கியால் ரவிந்தர் மின்னா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


உடன் இருந்த இருவர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.


கடந்த வாரம், ஹரியானாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திரா ஜவாஹ்ரா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement