துாய ஆக்சிஜன் கிடைக்க என்ன வழி? வன அதிகாரி சொல்வதை கேளுங்க...

திருப்பூர் : திருப்பூர், கருப்ப கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக காடுகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமிபிரபா தலைமை வகித்தார். நகர்ப்புற நல வாழ்வு மைய டாக்டர் திலிப்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குமார் தங்கவேல் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

திருப்பூர் வனகோட்ட உதவி வனப்பாதுகாவலர் கீதா பேசியதாவது:

மாணவ பருவத்தில் இருந்தே இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் உடல் நலத்துடன், ஆரோக்கியமாக இருக்க, வனத்தின் தேவை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்.

நாளைய இளைஞர் களாக மாற உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் மரக்கன்று நட்டு, பராமரிக்கும் வழக்கத்தை, பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மரக்கன்று வளர்ப்பு, பராமரிப்பு, அதன் மூலம் காடுகள் உருவாகினால் தான், மாசுகுறையும். இயற்கைக்கு எதிரான காற்று மாசை குறைத்தால் தான், சுவாசிப்பதற்கு உகந்த துாய ஆக்சிஜன் நமக்கு கிடைக்கும். 70 சதவீதம் காடுகளால் சூழப்பட்டுள்ள நாடு, பூடான். அங்கு வாழும் மக்கள் ஆரோக்கியம், உடல்நலத்துடன் வாழ, அங்குள்ள இயற்கை, வனப்பரப்பே காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, உலக வனநாள் விழாவை முன்னிட்டு, கருப்பகவுண்டன் பாளையம் மாநகராட்சி நகர்நல மையம், துவக்க, உயர்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

வனநாள் விழா ஓவியம், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை சுஜாதா நன்றி கூறினார்.

Advertisement