மரக்கன்று நடும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு மா.கம்யூ., சண்முகம் உட்பட 125 பேர் கைது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் மற்றும் விவசாய சங்கத்தினர் 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான தீர்வை ஏற்படாத 165 புஞ்சை தரிசு நிலத்தை ஆக்கிரமித்து நடப்பட்டிருந்த முந்திரி, வாழை மரங்களை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஜன.,29ம் தேதி அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, அகில இந்திய விவசாய சங்க இணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயற்குழு ராஜேஷ்கண்ணன், மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் மலையடிக்குப்பம் பகுதியில் அதிகாரிகள் அகற்றிய முந்திரி மரங்கள் இருந்த அதே இடத்தில் மீண்டும் முந்திரி கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவினரிடம் எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், ஆர்.டி.ஓ.,அபிநயா, தாசில்தார் பலராமன் ஆகியோர் முந்திரி மரக்கன்றுகளை நடக் கூடாது எனக் கூறினர். இதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

பின், தடையை மீறி முந்திரி கன்றுகளை நட முயன்ற மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் மற்றும் 40 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement