தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும்: தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்

64

சென்னை: ''லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தி சென்னையில் தி.மு.க., கூட்டிய கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.



முக்கியமான நாள்



கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அழைப்பை ஏற்று வருகை தந்துள்ள அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்று திரண்டு உள்ளோம்.பன்முகத் தன்மை கொண்டது இந்தியா. தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களில் கடுமையாக பாதிக்கும். பல்வேறு மொழி, இனம், கலாசாரம் கொண்டது இந்தியா.

கூட்டாட்சி



ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல; அதிகாரம் பற்றியது.
மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை நடந்தால், சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக நம்மை மாற்றி விடும்.

மாநில உரிமைகள்



தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இது, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி.

இது தொடர்பாக கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பமாக இருக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாகவே பா.ஜ., எப்போதும் இருந்து வருகிறது.

12 தொகுதிகள்



தொகுதி குறைந்தால் நிதி பெறுவதில் சிரமம் ஏற்படும். அனைத்து தரப்பு மக்களின் விளைவாகவே தேசம் உருப்பெற்றது. கூட்டாட்சிக்கு வரும் சோதனைகளை ஜனநாயக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி உள்ளோம். கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நடவடிக்கை இது. நமது பண்பாடு அடையாளம் ஆபத்தை சந்திக்கும். சமூக நீதி பாதிக்கப்படும். தமிழகம் 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது. தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழந்து விடும்.

வலிமை குறையும்



மாநில உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை அவசியம். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும். எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. குறையவும் விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைந்தால், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறையும்.


இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.




தி.மு.க., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, பிஜூ ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஜனசேனா, பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, கேரளாவை சேர்ந்த கட்சிகள் என 8 மாநிலங்களை சேர்ந்த 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்மானம்

கூட்டம் முடிவில், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த கூட்டம்

கூட்டம் முடிவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம், ஹைதராபாத்தில் நடக்கும் என்று அறிவித்தார்.

Advertisement