அரசு பணத்தில் கிரிக்கெட் சூதாட்டம்: ஒடிசாவில் அதிகாரி கைது

1

கஞ்சம்: ஒடிசாவில் அரசு பணம் ரூ.43 லட்சத்தை எடுத்து சூதாட்டம் ஆடிய பஞ்சாயத்து அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கஞ்சம் மாவட்டம் ராதாதேய்ப்பூர் கிராமப் பஞ்சாயத்தின் செயல் அதிகாரியாக இருந்தவர் ஹேத்ரமோகன் நாயக். இவர் பஞ்சாயத்து தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு,வங்கியில் இருந்து அரசு பணத்தை எடுத்துள்ளார்.

மத்திய அரசு நிதியுதவி தொகை, மாநில நிதி ஆணையம், பொது விநியோகத் தொகை மற்றும் முதியோர் ஓய்வுத் தொகை என பல்வேறு திட்டங்களுக்காக பல்வேறு வங்கி கணக்கில் இருந்த ரூ.43 லட்சத்தை எடுத்துள்ளார்.

இந்தத் தொகையை ஆன்லைன் விளையாட்டு, கிரிக்கெட் பெட்டிங் என சூதாட்டங்களில் பணத்தை செலவழித்து வந்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றம் உறுதியானது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கடந்த 2024ம் ஆண்டு பணிக்கு சேர்ந்ததாகவும், அப்போது முதலே இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு மோசடி



அதேபோல, காலஹந்தி மாவட்டத்தில் தல்நேகி கிராமப் பஞ்சாயத்து செயல் அதிகாரி தீபனந்தா சாகர், ரூ.3.26 கோடி அரசுப் பணத்தை கிரிக்கெட் பெட்டிங்கில் பயன்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement