முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் 5 பேர் கைது; குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18ம் தேதி அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது என்பவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.