குழந்தை திருமணங்கள்: ஒடிசாவில் தொடரும் அவலம்!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், சராசரியாக ஒவ்வொரு நாளும் 3 குழந்தை திருமணங்கள் நடப்பதாக, அரசு அளித்துள்ள புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.

ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளில், (2019 முதல் பிப்.2025 வரை) 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக, நமரங்பூரில் மட்டும் 1,347 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அரசு புள்ளி விபர அறிக்கையில் கூறியுள்ளது. ஒவ்வொரு நாளும், சராசரியாக 3 குழந்தை திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

அரசு அறிக்கையின்படி,கஞ்சம் மாவட்டம் 966 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோராபுட் மாவட்டம் 636 வழக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மயூர்பஞ்ச், ராயகடா, பாலசோர், கியோஞ்சர், கந்தமால் மற்றும் நயாகர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் ஜார்சுகுடா மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த திருமணங்கள் பெரும்பாலும் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாக உள்ளது. அவர்கள் சட்டப்பூர்வ வயதிற்கு முன்கூட்டியே திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் நம்ரதா சாதா கூறுகையில்,“குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முழுமையாக நிறுத்த முடியாது. பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காத வகையில், அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.” என்றார்.

ஒடிசா அரசு சார்பில், 'குழந்தை திருமணத்தைத் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறிச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement