நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல; தற்கொலை தான்; வழக்கை முடித்தது சி.பி.ஐ.,

5


புதுடில்லி: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு அவரது தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ., கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவருக்கு வயது 34. இவர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர், 2020, ஜூன் 14ல், மும்பையின் பாந்த்ராவில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.



பிரேத பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்தார். இது தொடர்பாக மும்பை போலீசார், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர்.


இதற்கிடையே, இவரது உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம் பெற்றிருந்த ரூப்குமார் ஷா, 'நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. உடலை ஆய்வு செய்த போது, இது நிச்சயம் தற்கொலை இல்லை; கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.


இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் என நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு சி.பி.ஐ., இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ., தரப்பில், 'கொலை என்று சந்தேகிக்க எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை.


சமூக வலைதளங்களில் பேசப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை; மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்திருக்கலாம்' என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்கொலை தான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ., கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Advertisement