மயில்ரங்கத்தில் தடுப்பணை முதல்வர் அறிவிப்பாரா?

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில், தடுப்பணை கட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாமிநாதனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்தாண்டு ஈரோடு பொதுப்பணித் துறை நீர்வளத்துறை சார்பில் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போதைய பட்ஜெட்டில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று இப்பகுதியினர் எதிர்பார்த்தனர். எந்த அறிவிப்பும் இல்லை. நேற்று முன்தினம் முத்துாரில் நீர் வளத்துறை சார்பில், 2.30 கோடியில் வாய்க்கால் சீரமைப்பு, 3 கோடி ரூபாயில், தாராபுரத்தில் அமராவதி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. மயில்ரங்கம் அணைக்கட்டு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் இது குறித்து அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement