சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயில்

சாத்துார்: சாத்துாரில் மண்ணில் புதைந்து வரும் அவ்வையார் கோயிலை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாத்துார் மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் எதிரில் உள்ளது அவ்வையார் கோயில். 45 ஆண்டுகளுக்கு முன்பு இது அவ்வையார் சத்திரம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடம் தற்போது மண்ணில் புதைந்து வருகிறது.

அவ்வையார் சத்திரத்தில் அவ்வையார் சிலை வைத்து வணங்கப்பட்டதால் சாத்துார் பகுதி மக்கள் அவ்வையார் கோயில் என்றும் அழைத்து வந்தனர். குறிப்பாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

மேலும் இங்கு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அவ்வையார் கோயில் ரோடு உயர்ந்த காரணத்தால் மண்ணுக்குள் புதைந்து வருகிறது. கற்துாண்களால் ஆன இந்த கோயில் பண்டைய நாகரீகத்தின் அடையாளமாக உள்ளது. தான தர்மம் செய்யும் இடமாக இருந்த இந்த இடம் தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.

பழமையான வழிபாட்டு முறையின் சான்றாகவும் கலாசாரத்தின் அடையாளமாக உள்ள இந்த கோயிலை புனரமைத்து மீண்டும் அவ்வையார் கோயிலாக அமைக்க வேண்டும் என ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement