அமெரிக்கக்காரனே ஆவின் நெய்யை தான் விரும்புறான்; சட்டசபையில் அமைச்சர் கலகல

5

சென்னை; அமெரிக்கக்காரனே ஆவின் நெய்யை தான் விரும்புறான் என்று சட்டசபையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலகலப்பாக பேசினார்.



சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 2ம் நாளான இன்றைய விவாதத்தில் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.


அந்த வகையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான தளவாய் சுந்தரம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் கூறியதாவது;


கிராமப்பகுதிகள் அதிகம் கொண்டுள்ள கன்னியாகுமரியில் 56 சொசைட்டிகள் உள்ளன. இங்கு நீங்கள் ஆவின் பொருட்களை வாங்க சொல்கின்றீர்கள். சின்ன, சின்ன கிராமத்தில் சொசைட்டி இருக்கிறது. பொருட்கள் விற்பனையாவது இல்லை.


சொசைட்டிக்கு வரக்கூடிய ஊக்கத்தொகையை நீங்கள் ஆவின் மூலமாக வாங்க வேண்டும் என்கிறீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 56 சொசைட்டிகளிலும் இந்த பிரச்னை உள்ளது.


என்னுடைய கிராமம் தோவாளை. சின்ன கிராமத்தில் பால் விற்கலாம். ஆனால் வெண்ணெய், நெய் விற்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. 56 சொசைட்டியும் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. எனவே அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


இதற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதிலளித்து பேசியதாவது;


சொசைட்டிகள் எல்லாம் செயலற்ற நிலையில் இருப்பதாக தளவாய் சுந்தரம் சொன்னார். தமிழகம் முழுக்க 300 சொசைட்டி செயலற்று உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் இப்படி இருக்கிறது. அதெல்லாம் இப்போது சீர் அடைந்து ஓரளவுக்கு பால் உற்பத்தியை கூட்டி உள்ளோம்.


டார்கெட் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வெயில் காலத்தில் 2 மாதம் பால் குறைச்சலாக தான் வரும். ஆனால் மூன்றரை லட்சம் அதிகமாக கொண்டு வந்திருக்கிறோம். இப்போது விற்பனையில் என்னவென்றால் நெய் உலகத்தரம் வாய்ந்தது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.மறந்துவிட வேண்டாம்.


நம்முடைய விலை 50 ரூபாய் கூட இருந்தாலும் அமெரிக்கக்காரன் நம்ம நெய்யைத் தான் விரும்புகிறான். ஆகவே நல்ல தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எந்தெந்த ஊரில் சொசைட்டி செயலற்று உள்ளது என்று எழுதிக் கொடுங்கள்.


தோவாளை எனக்கு தெரியும். அங்கு நல்ல மலர்கள் எல்லாம் விற்கப்படும். பால் சொசைட்டியை நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் உடனடியாக ஏற்பாடு பண்ணுகிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement