தனியார் பெயரில் அரசு நிலம்: ஈரோடு மாஸ்டர் பிளானில் 'மக்கர்'

ஈரோடு:ஈரோடு மாஸ்டர் பிளானில் 80 அடி சாலை நீக்கப்பட்டு, வரைபடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாநகராட்சியில் புதிதாக அமையும் மாஸ்டர் பிளானில், மாரியம்மன் கோவில், சி.எஸ்.ஐ., மகளிர் பள்ளி அருகே உள்ள 12.66 ஏக்கர் நிலம், அரசுக்கு சொந்தமானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த மாஸ்டர் பிளானில், 80 அடி திட்ட சாலை என தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடத்தை, 'ரிசர்வ்டு பார் பப்ளிக் பர்பஸ்' என, தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது வரைவு நிலையில் உள்ள மாஸ்டர் பிளானில் இது மறைக்கப்பட்டு, 80 அடி திட்டசாலையில் நீக்கப்பட்டுள்ளது.

இந்த 80 அடி சாலையை உள்ளடக்கிய, 12.66 ஏக்கர் நிலத்தை 'அரசு நிலம்' என குறிப்பிடுவதற்கு பதில், 'சி.எஸ்.ஐ., இன்ஸ்டியூஷன்ஸ்' என குறிப்பிட்டு, 'மாஸ்டர் பிளான் 2047' என வரைபடம் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முற்றிலும் முரணானது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

மாநகரின் மையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புடைய அரசு நிலத்தை, தனியார் பெயருக்கு மாற்றி மாஸ்டர் பிளான் தயாரிப்பது சட்ட விரோதம். எனவே, 12.66 ஏக்கர் நிலத்தை அரசு நிலமாகவும், 80 அடி சாலையையும், மாஸ்டர் பிளான் 2047ல், மக்கள் உபயோகத்துக்கானது என்பதை ஊர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement