கட்சி தலைவர்களின் ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ., முனிரத்னா 

பெங்களூரு : தன்னை கொலை செய்ய துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார் என்று கூறிய போதும், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு ஆதரவாக கட்சியில் யாருமே குரல் கொடுக்கவில்லை.

பெங்களூரு ஆர்.ஆர்., நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தோட்டக்கலை அமைச்சர் ஆனார். 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். திரைப்பட இயக்குநர், பணக்காரர் என்பதால் முனிரத்னாவுக்கு பா.ஜ.,வில் நல்ல பெயர் இருந்தது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் தோற்கடிக்கப்பட்டார்.

பெங்களூரு ரூரல் தொகுதிக்குட்பட்ட ஆர்.ஆர்., நகரில் காங்கிரசை விட பா.ஜ., 1 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றது.

இதனால் முனிரத்னா மவுசு மேலும் அதிகரித்தது. இதையடுத்து, துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஆகியோருக்கு எதிராக முனிரத்னா தீவிர அரசியல் செய்தார்.

பலாத்கார வழக்கு



இந்நிலையில், ஒப்பந்ததாரர் ஒருவரை ஆபாசமாக திட்டிய வழக்கில் முனிரத்னா கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போதே, அவர் மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.

தன் அரசியல் எதிரிகளை வீழ்த்த எச்.ஐ.வி., பாதித்தோரின் ரத்தத்தை எடுத்து ஊசி மூலம் செலுத்தியதாக முனிரத்னா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

பலாத்கார வழக்கில் சிறைக்கு சென்று வந்தபின் முனிரத்னா அடக்கி வாசித்து வந்தார். தற்போது மீண்டும் சிவகுமார், சுரேஷுக்கு எதிராக தீவிர அரசியலை துவக்கியுள்ளார்.

சிவகுமார், சுரேஷ் ஆகியோர் தன்னை கொலை செய்ய கடந்த ஆறு மாதங்களாக சதி செய்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது அமைச்சர் ராஜண்ணாவை 'ஹனி டிராப்' செய்ய முயன்ற பிரச்னையை வைத்து சிவகுமாரை, முனிரத்னா தினமும் விமர்சித்து வருகிறார்.

15 வயது பேரன்



'ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா ஆகியோரை சதி செய்து, சிவகுமார் சிறைக்கு அனுப்பினார். என்னையும் அப்படிதான் சிறைக்கு அனுப்பினார். என் மீது எந்த தவறும் இல்லை' என, சந்தில் சிந்து பாட ஆரம்பித்தார்.

சட்டசபையில் பேசும்போது கூட, 'எனக்கு 15 வயதில் பேரன் உள்ளான். என் மீது பொய் பலாத்கார வழக்கு பதிவு செய்ததால், என் பேரனால் வெளியே நிம்மதியாக செல்ல முடியவில்லை' என்று உருக்கமாக பேசினார்.

இப்படி பேசினால், தன் கட்சி தலைவர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று நினைத்தார். ஆனால் யாருமே முனிரத்னாவுக்கு ஆதரவாக பேசவே இல்லை.

தன்னை கொலை செய்ய முயற்சி நடக்கிறது என்று கூறிய போது கூட சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சட்டசபை கூட்டத்தொடரின்போது அசோக்கை தேடி தேடி சென்று முனிரத்னா பேசினார். ஆனால் அசோக் ஏதோ வேண்டாத வெறுப்பாகவே முனிரத்னாவிடம் பேச்சு கொடுத்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது முனிரத்னா சொல்வதை நம்புவதற்கு அவர்கள் கட்சியில் யாருமே தயாராக இல்லை என்பதும், கட்சியில் அவர் தனித்து விடப்பட்டதும் தெளிவாக தெரிகிறது.

Advertisement