தங்க மணல் என கூறி ரூ.68 லட்சம் மோசடி; நாமக்கல் தொழிலாளிகளை ஏமாற்றிய கும்பல்

1


கொச்சி: நாமக்கல்லைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளிகளிடம், தங்கத் துகள் கலந்த மண் என கூறி, வெறும் மணலை 68 லட்சம் ரூபாய்க்கு விற்ற குஜராத்தை சேர்ந்த நான்கு பேர், கேரளாவில் நேற்று கைதாகினர்.


குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த சந்தீப் ஹஸ்முக், 37, விபுல் மஞ்சி, 43, தர்மேஷ் பாய், 38, க்ருபேஷ் பாய், 35, ஆகிய நால்வரும், கேரளாவின் கொச்சி அருகே பாலரிவட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தங்கத் துகள் கலந்த மணல் விற்பதாக கூறியுள்ளனர்.

குஜராத் கும்பல்



இதையறிந்த தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளிகள் சிலர், அவர்களை அணுகினர்.


அவர்களிடம், தங்க நகை செய்யும் தொழிற்சாலையில் இருந்து சேதமாகும் தங்கத் துகள்கள் கலந்த மண்ணை சேகரித்து வைத்திருப்பதாக, அந்த கும்பல் கூறியது. 500 சாக்கு மூட்டைகளில் தங்க மணல் இருப்பதாக கூறி, சாம்பிளுக்கு 5 கிலோ மணலை தொழிலாளிகளிடம் குஜராத் கும்பல் கொடுத்தது.


அந்த மணலை தமிழக தொழிலாளிகள், அங்கிருந்த மேஜையில் வைத்து சோதித்துப் பார்த்தனர்.

காசோலை



ஆனால், அந்த மேஜையிலும், தராசிலும் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சிறிய துளையை குஜராத் கும்பல் ஏற்கனவே போட்டு வைத்திருந்தது.


அது தெரியாமல் மணலை நாமக்கல் தொழிலாளிகள் சோதித்தபோது, நால்வரில் ஒருவர், மேஜைக்கு அடியில் மறைந்திருந்து, ஊசி சிரிஞ்ச் மூலமாக, துளை வழியாக தங்க கரைசலை செலுத்தியுள்ளார்.


இதையடுத்து, மணலில் தங்கம் கலந்திருப்பதாக நம்பி, 5 டன் மணலுக்காக 50 லட்சம் ரூபாய் பணம்,18 லட்சம் ரூபாய்க்கு காசோலைகளை நாமக்கல் தொழிலாளிகள் கொடுத்துள்ளனர்.


ஆனால், வீட்டுக்கு வந்து பார்த்தபோது தங்க மணலுக்கு பதில் வெறும் மணலை அந்த கும்பல் கொடுத்தது தெரியவந்தது.


அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள், பாலரிவட்டம் போலீசில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட கேரள போலீசார், வெறும் மணலை கொடுத்து ஏமாற்றிய குஜராத்தைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்தனர்.


விசாரணையில், இதே போன்ற மோசடியை கேரளாவின் எர்ணாகுளத்திலும், தமிழகத்தின் சேந்தமங்கலத்திலும் இந்த கும்பல் செய்தது தெரிந்தது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

Advertisement