கோவையில் பின்னேற்பு தீர்மானங்கள்: மாநகராட்சியில் கோல்மால்


கோவை: கோவை மாநகராட்சியில் முக்கிய தீர்மானங்களை, வார்டு கமிட்டி, நிலைக்குழுக்களில் விவாதிக்காமல், மேயரின் முன் அனுமதி பெற்று, ஒப்புதல் வழங்கி, பின்னேற்பு கேட்டு நேரடியாக மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்படுகின்றன.

இது முறைகேடுகளுக்கு தான் வழிவகுக்கும் என, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகராட்சியில், தி.மு.க., மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடத்தப்படுகிறது.

வருத்தம்



சமீபமாக முக்கியமான தீர்மானங்களை நிலைக்குழுக்களின் விவாதத்துக்கு அனுப்பாமல், மாநகராட்சி கூட்டத்துக்கு நேரடியாக கொண்டு வரப்படுகின்றன.

அதையும் மேயர் முன் அனுமதி பெற்று செயல்படுத்தி விட்டு, பின்னேற்பு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகின்றன. கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தால், கருத்துக்கள் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இது, கவுன்சிலர்களுக்கு இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணத்துக்கு, லே-அவுட் அப்ரூவல் தொடர்பான தீர்மானங்கள் நகரமைப்பு குழு விவாதத்துக்கு அனுப்பப்படாமல் மன்றத்துக்கு தருவிக்கப்படுகின்றன.

இதில், முறைகேடு நடந்திருப்பதாக, தமிழக அரசின் கவனத்துக்கு நகரமைப்பு குழுவினர் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்காததால், அத்தவறு தொடர்ந்து நடைபெறுகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் கிடப்பில் போடப்பட்ட கோப்புகளுக்கு இப்போது அனுமதி அளிப்பதன் அவசரம் ஏன் ஏற்பட்டது என்ற சந்தேகமும் கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், 'முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சர், மேயர், துணை முதல்வராக பதவி வகித்தவர். உள்ளாட்சி துறை சார்ந்த விஷயங்களை நன்கு அறிந்தவர்.

'ஆல் பாஸ்'



இவரது ஆட்சி காலத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டம் நடைபெறுகிறது; அக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரலாம்.

'மேயரிடம் முன்அனுமதி பெற வேண்டிய அவசியம் எதற்காக வருகிறதென தெரியவில்லை. மாநகராட்சி மன்றத்தில் 'ஆல் பாஸ்' முறையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

'இது, தவறான நடைமுறை. இதுபோன்ற பிரச்னைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement