குப்பை கொட்டும் இடமாக மாறிய பேருந்து பணிமனை குடிநீர் கிணறு

திருத்தணி,:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இப்பணிமனையில் 84 பேருந்துகளும், 300க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த போக்குவரத்து பணிமனைக்கு குடிநீர் வசதிக்காக, கிணறு அமைத்து அதன் வாயிலாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஒன்றரை ஆண்டாக, தரைமட்ட கிணறு மற்றும் மின்மோட்டார் அறை முறையாக பராமரிக்காததால், நகராட்சி ஊழியர்கள் மற்றும் அருகே வசிப்போர் குப்பையை கொட்டுகின்றனர்.

மேலும், மின்மோட்டார் அறையும் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில மாதங்களாக, தரைமட்ட கிணற்றில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில்லை.

இதனால், பணிமனையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய தண்ணீர் வசதியில்லாததால், அரசு பேருந்துகளை கழுவ முடியாத நிலை உள்ளது. மேலும், ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழிற்நுட்ப ஊழியர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தினமும் அவதிப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் கிணற்றை சீரமைக்க வேண்டும். மேலும், குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement