'தர மதிப்பீடுகளை அறிந்து கல்லுாரியை தேர்வு செய்யுங்கள்'

சென்னை:''ஆங்கிலம் படிப்போருக்கு, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தர மதிப்பீடுகளை அறிந்து, கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்,'' என, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் பேராசிரியர் ராஜன் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

இந்தியாவில், 19,000 கலை கல்லுாரிகளும், 16,500 அறிவியல் கல்லுாரிகளும், 13,500 வணிக படிப்புகள் சார்ந்த கல்லுாரிகளும் உள்ளன.

இது, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

பொறியியல் உள்ளிட்ட பிற துறையினர், அந்தந்த துறை சார்ந்த வேலைக்கு மட்டுமே செல்ல இயலும். ஆனால், கலை மற்றும் அறிவியில் துறை மாணவர்கள் மட்டுமே, அனைத்து துறையிலும் வேலைக்கு செல்ல முடியும்.

கலைத் துறையில் தற்போது, ஆங்கிலம் படிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

ஆனால், இளங்கலை ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு, பல துறையிலும் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறன.

கணித துறையை பொறுத்தவரையில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில், 'தரவு பகுப்பாய்வாளர்' உள்ளிட்ட, அதிக ஊதியத்துடன் கூடிய பதவிகள் காத்திருக்கின்றன.

இதற்கு, கணிதம், புள்ளியல் உள்ளிட்ட துறையை சார்ந்தவர்கள் தகுதி வாய்ந்தவர்.

அதேபோல், இயற்பியில், வேதியியல் துறை மாணவர்களுக்கு, டாக்டர் ரெட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

மேலும், இளங்கலை வணிகம், பி.பி.ஏ., - எம்.பி.ஏ., உள்ளிட்ட துறைகளில், நிறுவனங்களின் வழிக்காட்டுதலுடன் கூடிய சிறப்பு பயிற்சிகள் கல்லுாரிகளில் வழங்கப்படுகின்றன.

கலை மற்றும் அறிவியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், கல்லுாரியின் தரம் குறித்து அறிவது அவசியம்.

தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம், ஒவ்வொரு கல்லுாரியின் தரத்தையும் நிர்ணயம் செய்து, தர மதிப்பீட்டு குறிப்பீட்டை வழங்கி உள்ளது.

அதேபோல், கல்லுாரியின் என்.ஐ.ஆர்.எப்., மதிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்து, பின் தங்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

விரைவில் வேலை பெற விரும்பும் மாணவர்கள், தொழில்துறை பி.காம்., உள்ளிட்ட பிரிவுகளை தேர்வுச் செய்து படியுங்கள்.

தற்போது, 'லாஜிஸ்டிக்ஸ்' துறை வளர்ந்து வருகிறது. மத்திய அரசு இத்துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

அரசே, இத்துறை மாணவர்களுக்கு, திறன் பயிற்சியுடன் கூடிய ஊதியத்தையும் வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.



பரிசு மழை

நிகழ்ச்சியின் இடைவெளியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, உரிய பதிலளித்த மாணவர்களுக்கு, 'லேப் டாப், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டேப்' என, பரிசுகள் வழங்கப்பட்டன.★ திருவள்ளுரை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் அருண்குமார், 40,000 ரூபாய் மதிப்பிலான, 'லேப் டாப்' பரிசாக பெற்றார் ★ பிளஸ் 1 மாணவி சுபாஷினிக்கு, 'டேப்' பரிசாக வழங்கப்பட்டது★ ஆதித்யா, மயிஷா, சுரேந்தர், பிரசன்ன ஜெயசெல்வா ஆகியோருக்கு, 'ஸ்மார்ட் வாட்ச்' பரிசாக வழங்கப்பட்டன.




கூடுதல் மகிழ்ச்சி




லேப்டாப்' பரிசு பெற்ற, அருண்குமார் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி வாயிலாக, ஏ.ஐ., முதல் கலை மற்றும் அறிவியல் துறை வரை எவ்வாறு தேர்வு செய்வது, எந்த வகை படிப்புகள் வரும் காலங்களிலும் வளர்ச்சியடையும் என்பது குறித்து, விரிவான தகவல்களை தெரிந்துக் கொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு 'லேப்டாப்' பரிசு வழங்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சி. தற்போது நான் பிளஸ் 1 படிக்கிறேன். அடுத்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை சிறந்த முறையில் எழுதி, மீண்டும், 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்று, இதுபோன்று பரிசு பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement