'பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்!'

சென்னை:''பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்களை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.

அவர் பேசியதாவது:

நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, இயற்பியல், வேதியியல், கணக்கு, உயிரியல் பாடங்களின் அறிவு திறன் மற்றும் பிரச்னைக்கு தீர்வு அளிப்பது அவசியம். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுகளில், 'பிரச்னை தீர்க்கும் திறன்' தேர்வில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே, எழுத்து தேர்வு தாள் திருத்தப்படும்.

இவ்வாறு, சமூகத்தின் அனைத்து உயர் பதவிகளிலும், பிரச்னை தீர்க்கும் திறன் என்பது, குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. எனவே, தொழில்நுட்பம் வளர்ந்த நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்கள், இந்த திறனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு, மாணவர்கள் கணிதம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் மதிப்பெண் பெற விரும்புவோர், நன்றாக படிக்க வேண்டும் என்பதைவிட, வகுப்பறையில் ஆசிரியர் கூறுவதை, நன்றாக புரிந்து உள்வாங்க வேண்டும். இதற்கு உள்வாங்கும் திறனை வளர்ப்பது அவசியம்.

ஜே.இ.இ., தேர்வில் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். கடந்தாண்டு நடந்த ஜே.இ.இ, நுழைவுத் தேர்வில், 17,670 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இதில், தமிழகத்தில் இருந்து, 545 மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான், 2,760, ஆந்திராவில், 2,228, தெலுங்கானா, 2,003, மகாராஷ்டிரா, 1,846, உத்தர பிரதேசம், 1,765 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், 61 சதவீதம் சேர்ந்து விடுகின்றனர். மீதமுள்ள மாநிலங்கள், 39 சதவீதம் மாணவர்கள் சேர்கின்றனர்.

இதேபோல், என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. ஜே.இ.இ, தேர்வைப் பொறுத்தவரையில், 'டிஸ்கிரிப்டிவ்' முறையில் நடத்தப்படும் தேர்வல்ல. மாறாக, 'கான்சப்ட் இன் டெப்த்' கற்பிக்கப்பட்டு, அதில் பிரச்னை தீர்க்கும் திறனை சோதிக்கும் தேர்வு.

ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் உச்சத்தை அடைய வேண்டும் எனில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, பாடத்திட்டத்தை தமிழில் திறமையாக நடத்தக்கூடிய ஆசிரியர்கள் தேவை.

ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற விரும்புவோர், தீவிரத் தன்மையுடன், உரிய புத்தகங்களை, உள்வாங்கும் தன்மையுடன் தொடர்ந்து கற்றால், எளிதில் தேர்வில் வெற்றி பெற இயலும். படிப்பில் தீவிரம் இல்லையென்றால், வாழ்க்கையில் அடுத்த படியை அடைய இயலாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement