ஆயுர்வேதம் என மாறுகிறதா சித்த மருத்துவ நுால்கள்?

மதுரை : மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அட்டவணை 1ல் ஆயுர்வேத மருத்துவத்திற்கு 227 நுால்கள், சித்த மருத்துவத்திற்கு 88, யுனானிக்கு 112 என, மூல நுால்களின் ஆசிரியர், வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், 37 ஆயுர்வேத நுால்கள் ஆசிரியர் பெயர் இல்லாமல் தொகுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலநுால், ஆண்டு மற்றும் பதிப்பகத்தார் பெயருடன் வெளியிடாதது ஏன் என, தமிழ்நாடு சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்க மாநில தலைவர் ஜெயவெங்கடேஷ், செயலர் செந்தில்குமார் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:



தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சித்த மருத்துவ நுால்களை, மலையாளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே மொழிபெயர்த்துள்ளனர்.


இவற்றை ஆயுர்வேத நுாலாக மாற்ற முயற்சி நடக்கிறது. குறிப்பாக சித்த வைத்தியரின் புலிப்பாணி வைத்திய நுால் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின் புலிப்பாணி ஆயுர்வேத நுாலாக மாறியுள்ளது.


தமிழ் சித்த மருத்துவத்தின் பாரம்பரிய அறிவுக்கு மற்றொருவர் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தால், பின்னாளில் சித்த மருத்துவ நுால்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக வரலாறு மாறிவிடும். சமஸ்கிருத நுால்கள் மட்டுமே எதிர்காலத்தில் ஆவணப்படுத்தப்படும் அபாயம் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement