பல்கலைகழகத்தில் 25 சதவீத இடஒதுகீடு புதுச்சேரி எம்.பி.க்கள்., வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி புதுச்சேரி எம்.பி.,க்கள் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

புதுச்சேரி லோக்சபா எம்.பி., வைத்திலிங்கம், ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி ஆகியோர் துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரை சந்தித்து, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும் புதுச்சேரி மாணவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு இல்லாததால், அகில இந்திய மாணவர்களுடன் போட்டியிட்டு படிப்புகளில் சேர வேண்டிய சூழல் உள்ளது. ஆகையால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தற்சமயம் உள்ள அனைத்து நிலை படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

புதுச்சேரி கவர்னரிடம் பேசி தகுந்த நடவடிக்கையை எடுப்பதாக துணை ஜனாதிபதி உறுதியளித்தார்.

Advertisement