'சஸ்பெண்ட்' எஸ்.ஐ., மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

வில்லியனுார்: விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கி, சஸ்பெண்டான போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சேதராப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பம் சரண்ராஜ், குயிலாப்பாளையம் குணசேகரன் மற்றும் செந்தில் ஆகியோர் கடந்த மாதம் 12ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பைக்கில் சேதராப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

துத்திப்பட்டு அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருத்த டாரஸ் லாரி மீது பைக் மோதியது. பைக்கில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த கடப்பேரிக்குப்பம் சரண்ராஜின் சகோதாரர் முத்து, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் எப்.ஐ.ஆர்., நகல் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுத்தால் நகல் தருவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ரூ.2 ஆயிரம் பெற்றதை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், டி.ஜி.பி., ஷாலினி சிங், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றினார். தொடர் விசாரணைக்கு பின், நேற்று சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறை சேர்மனாக உள்ள தலைமை செயலாளர் ஒப்புதல் பெற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மீது லஞ்சம் பெற்றதற்காக நேற்று வழக்கு பதிந்தனர்.

Advertisement