வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.22.85 லட்சம் மோசடியில் மேலாளர் கைது

தேனி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நால்வரிடம் ரூ.22.85 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேனி கிளை நிறுவன மேலாளர் குமார் 46, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி பழனிசெட்டிபட்டி ஆசிரியர் காலனி ஆனந்தரூபன் 32. டிப்ளமோ இன்ஜினியர். இவர் எஸ்.பி.,சிவபிரசாத்திடம்அளித்த புகாரில், 'தேனியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவன மேலாளராக குமார் பணியாற்றினார். அவர், நிறுவன தலைமைஅலுவலகம் திருச்சியில் உள்ளதாகவும், இதனை கருமண்டபம் நட்சத்திரா நகரை சேர்ந்த மணிமாறன் மகன்கள் குருஈஸ்வர், பரணிதரன் நடத்துவதாக தெரிவித்தார். அவர்களிடம் ரூ.8.20 லட்சம் கொடுத்தால், திருச்சி கருமண்டபம் டிராவல்ஸ் உரிமையாளர் ஜெரோம் 39. மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினர். அதை நம்பி வங்கிக் கணக்கு மூலமும், நேரடியாகவும் ரூ.8.20 லட்சம் கொடுத்தேன். பின், நியூசிலாந்தில் ஓட்டலில் மேற்பார்வையாளர் பணிக்கு அனுப்புவதாக கூறினார். ஓராண்டு ஆன பின்பும் அனுப்பவில்லை.கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினார். இதுபோல் தேனி அரவிந்தனிடம் ரூ.5.65 லட்சம், மதுரையை சேர்ந்தமதுரைவீரனிடம் ரூ.3 லட்சம், அதேபகுதி பாலமுருகனிடம் ரூ.6 லட்சம் என நால்வரிடம் ரூ.22.85 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தார்.

எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் ஜெரோம், குருஈஸ்வரன், பரணிதரன், மேலாளர் குமார் ஆகிய நால்வர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்த ஆண்டு ஜெரோம், பரணிதரனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தேனி கிளை நிறுவன மேலாளர் குமாரை நேற்று கைது செய்தனர்.

Advertisement