தாட்கோ நிதியில் முறைகேடு கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

திண்டுக்கல் : ''தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது''என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஒன்றரை மாதம் முன் திண்டுக்கல் மாங்கரை கிராமத்தில் சாதாரண பிரச்னைக்காக கூலிப்படையை ஏவி அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. பின் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றோம். திண்டுக்கல்லில் பல சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது. அரசியல் பலத்தை பயன்படுத்தி வெளியில் வராமல் சிலர் மறைக்கின்றனர்.

யுடியூபர் சவுக்கு சங்கருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் தாயார் வீட்டிலிருக்கும் போது கழிவுகளை கொண்டுபோய் கொட்டியது கண்டிக்கத்தக்கது. மூன்றரை ஆண்டுகளில் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பல பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைதான் உள்ளது. இருமொழிகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டாம். தமிழகத்திற்கு 3 மொழிகள்தான் சரி. தி.மு.க., ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களில் குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனர். ஆட்சியில் பகிர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி பயணம் இருக்கும். கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது என்றார். ''பா.ஜ.,வை பாசிச ஆட்சி என விஜய் விமர்சித்துள்ளாரே'' என்ற கேள்விக்கு ''மற்றவர்கள் குறித்து என்னிடம் கேட்காதீர்கள்'' என பதிலளித்தார்.

Advertisement