மும்முனை மின்சாரம்: விவசாயிகள் வலியுறுத்தல்

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் பின்வருமாறு:

சிவசக்திவேல்: செங்கால் ஓடையை துார்வார நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டும். வெட்டிவேர் பயிர் சாகுபடிக்கு உரிய வழிகாட்டுதல் வேண்டும்.

முருகானந்தம்: கடல் நீர் உட்புகுவதால், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதிவராகநல்லுாரில் தடுப்பணை கட்டித்தர வேண்டும்.

செந்தில்முருகன்: புத்தக கண்காட்சி, கோடைவிழாவைப்போல விவசாயிகள் நலன் கருதி விவசாய கண்காட்சி நடத்த வேண்டும்.

ராமலிங்கம்: விவசாயத்திற்கு முறையான மின்வினியோகம் இல்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. குறைந்தபட்சம் 6 மணி நேரம் தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,ராஜசேகரன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement