காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டம்: முதல்வர்

சென்னை : ''சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏதுமின்றி, மக்கள் அமைதியாக, இணக்கமாக வாழ்கின்றனர். இதனால்தான் தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள் என, தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத, சில மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும், கொலை, கொள்ளை போன்ற ஒரு சில நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கி, மக்களை பீதியில் வைக்க, காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணை போகும் வகையில் துாபம் போடுகிறது. சில ஊடகங்களும், பத்திரிகைகளும் சேர்ந்து துணை போவது, இன்னும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடத் துடிக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல், எந்த கலவரமும் தி.மு.க., ஆட்சியில் இல்லை.

குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது; கைது செய்யப்படுகின்றனர்.

பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து, காவல் துறையும், தமிழக அரசும், மக்களை பாதுகாத்து வருகிறது. சில நேரங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை வைத்து, தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என, மக்களை திசைதிருப்ப வீண் புரளிகளை கிளப்பக் கூடாது.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், அவர் கூட்டணி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் கட்சியாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன் வர வேண்டும். தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியிலும் சரி, இப்போது எங்கள் ஆட்சியிலும், நடைபெறும் குற்றச் சம்பவங்களின் தரவுகளை வைத்துதான், காவல் துறையின் செயல்பாட்டை அளவிட முடியும்.

குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து, சட்டம் - ஒழுங்கு குறித்த தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம். அரசின் மீது ஆக்கப்பூர்வமான குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசியல் செய்வதற்காக, தமிழக காவல் துறையின் பெயரையும், அமைதியான மாநிலம் தமிழகம் என்ற பெயரையும் கெடுப்பதற்கு துணை போகாதீர்கள்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement