கல்வெட்டுகளால்  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கருத்தரங்கில் தகவல்

மதுரை: 'தமிழின் தொன்மைக்கு கல்வெட்டுகளே சான்று. அதனாலேயே செம்மொழி தகுதி கிடைத்தது' என தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் பேசினார்.

மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் 'அண்மைக்கால தொல்லியல் ஆய்வு' குறித்த கருத்தரங்கு முதல்வர் பாண்டியராஜா தலைமையில் நடந்தது. ஆய்வாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் வேதாச்சலம் பேசியதாவது: தமிழ் படித்தவர்களுக்கும் தொல்லியல் துறையில் வாய்ப்புகள் உள்ளன. ஆய்வை தமிழக, இந்திய, உலக இலக்கியங்களில் ஒப்பிட்டு, நடுநிலையோடு பார்க்க வேண்டும்.

உலகில் பழமையான மொழிகளாக க்யூனிபார்ம், ஹைரோகிளிப், சிந்துசமவெளி, தமிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5500 ஆண்டுகளுக்கு முன்பு க்யூனிபார்ம் எழுத்துகள் சுபேரியா நாட்டில் பயன்பாட்டில் இருந்தது. எகிப்து நாட்டின் அலெக்சாண்டரியா கல்வெட்டில் தமிழக வணிகன் குறித்த தகவல் உள்ளது.

நம்நாட்டில் பல நடுகல் சான்றுகளை மக்கள் உடைத்து பயன்பாட்டில் வைத்திருந்தனர். பல விஷயங்களை அறிய வெளிநாட்டிற்கு செல்கிறோம். நம் காலடி கீழே பல சான்றுகள் புதைந்துள்ளன.

மதுரையில் திருப்பரங்குன்றம், அரிட்டாப்பட்டி, ஆணைப்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் பல்வேறு கால கல்வெட்டுகள் கிடைத்ததால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்று குறிப்பிடுகிறோம் ஆனால் தமிழில் சங்கம் என்ற வார்த்தையே இல்லை. தமிழ்பிராமி எழுத்துகள் சோழர், சேரர் என பல காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் மாற்றம் கண்டுள்ளன. இவ்வாறாக தமிழின் தொன்மைக்கு கல்வெட்டுகளே சான்றாகும். அவை சக்தி வாய்ந்தவை. கல்வெட்டினாலே தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்தது என்றார். துறைத் தலைவர் காந்திதுறை பங்கேற்றார். ஆய்வாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

Advertisement