ஹிந்து ஆதியன் பழங்குடி மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை: ஹிந்து ஆதியன் பழங்குடி மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்படுவதால், மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில், ஆதியன் நகரில், 100க்கும் மேற்பட்ட ஹிந்து ஆதியன் பழங்குடி சமூக மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். பூம்பூம் மாடு இவர்களின் குலத்தொழில். மாறி வரும் காலத்தால், பூம்பூம் மாடு தொழில் குறைந்து, வெவ்வேறு தொழிலுக்கு சென்று உள்ளனர்.

இச்சமூக மாணவ - மாணவியர் அதிகம் பேர் பிளஸ் 2 படித்து வரும் நிலையில், இவர்களின் மேற்படிப்பு மற்றும் வேலைக்கு செல்வதற்கான ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்வியை பாதியில் நிறுத்தும் சூழல் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை தவிர்த்து, தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில், இவர்களுக்கு ஆதியன் பழங்குடியினர் என்ற ஜாதி சான்றிதழ் கொடுப்பதாகவும், எங்களுடைய ஜாதி குறித்த ஆதாரம் இருப்பதால், அதை பெற்றுக்கொண்டு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் ஏன் மறுக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினர்.

தங்கள் சந்ததியினர் படித்து நல்ல பதவிக்கு வர வேண்டும் என்றும், இதற்கு ஜாதி சான்றிதழ் அவசியமாவதால், முதல்வர் இதில் தனிகவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement