'மாசடைந்த நொய்யலாறு ஐந்தறிவு ஜீவனும் அறியும்'

திருப்பூர் : 'நொய்யலாறு நீரின் மாசு, ஐந்தறிவு ஜீவனும் அறிந்திருக்கிறது' என, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

திருப்பூரை மையப் படுத்தி ஈரோடு, கரூர் வரை செல்லும் நொய்யலாற்று நீர், விவசாய தேவைக்கு உதவியது.

ஆனால், காலப்போக்கில் சாயக் கழிவுநீர், நொய்யலை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் என, நொய்யல் மாசுபட்டு கிடக்கிறது.

நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் அறிக்கை: நொய்யல் ஆற்றில் தொழிற் சாலை மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழவுநீரால், நொய்யல் நீர் மாசடைந்திருக்கிறது. நொய்யல் நதியை மீட்க வேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கை, அரசின் செவிகளில் விழவில்லை.

கடந்த, 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில், பாதிப்பு மிக அதிகம். இந்த ஆற்றுநீர், குடிக்க உகந்ததல்ல என்பதை கால்நடைகள் கூட உணர்ந்திருக்கின்றன.

எனவே, மாநில அரசு, நொய்யல் நதியை மீட்டெடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement