பள்ளிவாசல்களில் ரம்ஜான் 27ம் இரவு சிறப்பு நிகழ்ச்சி

கீழக்கரை: ரம்ஜான் மாதத்தில் 27ம் இரவு சிறப்பு நிகழ்ச்சி கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ பெரிய ஜும்மா மஸ்ஜித்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

புனிதமான திருக்குர்ஆன் வானில் இருந்து இறங்கிய லைலத்துல் கத்ரு இரவு என்பதாகும். இந்த இரவான அன்றைய தினம் ரம்ஜான் பிறை 27ம் இரவு தராவீஹ் தொழுகைக்கு பிறகு சிறப்பு நிகழ்ச்சியாக கீழக்கரை டவுன் காஜி ஜும்மா மஸ்ஜித் மஹல்லியுமான காதர் பக்ஸ் உசேன் ஸித்தீகி தலைமையில் நடந்தது.

ஜும்மா மஸ்ஜித் பரிபாலன கமிட்டி தலைவர் டாக்டர் முகம்மது கியாதுதீன் முன்னிலை வகித்தார். முன்னதாக தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆன் ஓதி நிறைவு செய்யப்பட்டது.

இறைத்துாதர் நபிகள் வரலாற்று சொற்பொழிவு, திருக்குர்ஆனின் மகத்துவம் என்னும் தலைப்பில் உரையாற்றப்பட்டது. உலக நன்மைக்கான சிறப்பு துஆ ஓதப்பட்டது. அதிகாலை 2:30 வரை தொடர்ந்து தொழுகைகள் நடந்தது. ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் லைலத்துல் கத்ரு இரவு கொண்டாடப்பட்டது.மின்னொளியால் பல்வேறு வண்ணங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பள்ளிவாசல்கள் ஜொலித்தது.

Advertisement