மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு மறுசுழற்சி ஆலை பணிகள் துவங்கியது

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான கட்டுமான பணி துவங்கியுள்ளது.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொது உயிரி மருத்துவ கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு ஆலை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்து அறிவிப்பு வெளியானது.

அப்போதே சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இந்த ஆலை அமைக்க கூடாது என அருகிலுள்ள செய்களத்தூர் மற்றும் சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த ஆலை துவங்குவது பற்றி எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவ கழிவு மறுசுழற்சி செய்யும் ஆலை கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்த அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் இங்கு மருத்துவ கழிவு மறுசுழற்சி செய்யும் ஆலையை துவங்க கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் இப்பகுதியை சேர்ந்த அனைவரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Advertisement