ரோட்டில் குப்பையை கொட்டி கவுன்சிலர்கள் தர்ணா

கோவை : கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், 132 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதில், 54 தீர்மானங்கள் முன்னரே கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டன.

மீதமுள்ள தீர்மானங்கள் நேற்று முன்தினமே வழங்கப்பட்டன.

இதை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஷர்மிளா மற்றும் ரமேஷ் ஆகியோர், மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு இருப்பதால், அவர் பங்கேற்கவில்லை. இருந்தாலும், மூன்று கவுன்சிலர்களும் இணைந்து, விக்டோரியா ஹாலுக்கு வெளியே தரையில் அமர்ந்து, ரோட்டில் குப்பையை கொட்டி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், பிரபாகரன் கூறியதாவது:

கோவை மாநகராட்சி வரலாற்றில் முக்கியமான நாள். இதுபோன்ற கூட்டத்தை எந்த மாநகராட்சியும் நடத்தியிருக்காது. மன்ற கூட்டமும், பட்ஜெட் கூட்டமும் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. இதுபோன்று எங்காவது நடக்குமா? அப்படி ஒரு அநியாயத்தை கோவை மாநகராட்சி செய்கிறது.

குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது.

பழைய நிறுவனத்தினர் ஒரு வாகனம் கூட வாங்கவில்லை; மாநகராட்சி வாகனத்தை வைத்துக் கொண்டே குப்பை அள்ளியுள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement